311. இரவுத்தலைச் சேறல் காண்டல் வேட்கையொடு கனையிருணடுநாள் மாண்ட சாயன் மனையிறந் தன்று. (இ - ள்.) தலைவனைக் காணவேண்டுமென்னும் ஆசையோடு செறிந்த இருளையுடைய ஒத்த யாமத்துமாட்சிமைப்பட்ட மென்மையாள் தன் இல்லினின்று இறந்தது எ-று. வ - று.1பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன் பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க் கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்கேன் வழிகாண மின்னுக வான். (இ - ள்.) வீரமுரசென்னக் கற்பாறையிடத்து ஒலிக்கும் பரந்த அருவியாற்பொலிந்த நாடன் மூட்டுவாயினையுடைய ஆரமார்பத்தைத் தழுவ எனக்குத் துணையாய் மிக்க ஆசை செலுத்தச் செறிந்த இருளிடத்துப் போவேன், நெறியைக் காண மின்னுவதாக, மேகம் எ-று. (6) 312. இல்லவை நகுதல் இல்லவை சொல்லி யிலங்கெயிற்றரிவை நல்வய லூரனை நகைமிகுத் தன்று. (இ - ள்.) உள்ளனவல்லாதவற்றை உரைத்து விளங்கும் பல்லினையுடைய மடவாள் அழகிய பழனஞ்சூழ்ந்த ஊரனை நகையைப் பெருக்கியது எ-று. வ - று. முற்றா முலையார் முயங்க விதழ்குழைந்த நற்றா ரகல நகைதரலின் - நற்றார் கலவே மெனநேர்ந்துங் காஞ்சிநல் லூர புலவேம் பொறுத்த லரிது. (இ - ள்.) இளமுலையினையுடையார் தழுவப் பூந்தோடு வாடின அழகிய மாலையினையுடைய மார்பம் சிரிப்பைத் தருதலின், அழகிய மாலையினை மணவேமென நிச்சயித்தும் காஞ்சிமரத்தினையுடைய அழகிய ஊரனே, ஊடேம்; நின்னுடன் ஊடின் ஆற்றுதல் அரிது எ-று. அரிது ஆதலிற் புலவேம் எ-று. (7) 313. புலவியுட் புலம்பல் நலவளை மடந்தை நற்றார் பரிந்து புலவி யாற்றாள் புலம்புற் றன்று. (இ - ள்.) அழகிய தொடியினையுடைய மடவாள்தலைவன் மார்பின் மாலையை அறுத்து ஊடலாற்றாளாய்த்தனிமையுற்றது எ-று.
1. தொல். அகத். சூ. 54, இளம். மேற். |