(இ - ள்.) ஒளிபரந்த வாளினையும் வலிய வீரக்கழலாற்சிறந்த காலினையும் வெய்ய சோதியாற்பொலிந்த வேலினையும் தண்ணளியையுமுடையவன் கைப்பற்றிக் கொள்வானாகப் பதாகையினையுடைய சேனையை ஒன்றுபடக் கொண்டெழுந்தான்; பொருந்தாதார் வெருவரு வாயிலினையும் புகுதற்கரிய குறுங்காட்டினையும் ஆழ்ந்த கிடங்கினையும் மேகம் பரக்கும் ஏவறையினையுமுடைய அரணத்தை. எ - று. 100. அரச வுழிஞை தொழில்காவன் மலிந்தியலும் பொழில்காவலன் புகழ்விளம்பின்று. (இ - ள்.) காவற்செய்தி மிக்குநடக்கும் பூமிகாவலன்றன் கீர்த்தியைச் சொல்லியது. எ - று. வ - று. ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி ஆக்க மவன்க ணகலாவால்-வீக்கம் நகப்படா வென்றி நலமிகு தாராற் ககப்படா வில்லை யரண். (இ - ள்.) மனவெழுச்சியும் மாறுபாட்டின் பெருமையும் பொருந்திய நல்ல விசாரமும் செல்வப் பெருக்கமும் அவனிடத்து நீங்காவால்; பெருமையினையும் பிறரால் இகழத்தகாத வெற்றியினையும், நன்மை மலியும் மாலையினையும் உடையவனுக்குக் கையகப்படாதன இல்லை, காவற்குறும்புகள் யாவையும். எ - று. (6) 101. 1கந்தழி மாவுடைத்தார் மணிவண்ணன் சோவுடைத்த மறநுவலின்று
(இ - ள்.) வண்டினையுடைய மாலையாற் சிறந்த நீலமணிபோன்ற மேனியையுடையான் வீரசோவென்னும் அரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது. எ - று. வ - று.2அன்றெறிந் தானு மிவனா லரண்வலித் தின்றிவன் மாறா வெதிர்வார்யார்-என்றும் மடையார் மணிப்பூ ணடையாதார் மார்பிற் சுடராழி நின்றெரியச் சோ. (இ - ள்.) அந்நாள் அழித்தவனும் இவன், அரண்வலிதென்றுதேறி; இந்நாள் இவன்பகையாக எதிர்ப்பார் யார் எக்காலத்தும்? மூட்டார்ந்த மணியணியையுடைய பொருந்தாதாருடைய அகலத்து ஒளிவிடுந் திகிரி நின்று அழலச் சோவென்னும் அரணத்தை. எ - று. இஃது உவமையன்று; மிகுதி கூறியது. (7)
1. கந்தழி : தொல். புறத். சூ 33. 2. தொல். புறத். சூ. 27. இளம். மேற். |