பக்கம் எண் :

(இ - ள்.) வேற்படையினது தறுகண்மையைச் சொல்லிப் பகைவருடைய கேட்டிற்கு நோவினும் முறைமையாக விசாரித்துரைப்பின் அதுவேயாம் எ - று.

வ - று. மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை
ஒன்னார் நடுங்க வுலாய்நிமிரின் - என்னாங்கொல்
ஆழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப்
பாழித்தோண் மன்னர் படை.

(இ - ள்.) ஒளிநிறைந்த செற்றம்பொழியும் வேலினையும் தலைமையினையுமுடைய கடல்போன்ற சேனை பகைவர் தலைபனிப்ப நிலை பெயர்ந்து நடப்பின் என்படுமோ ! வட்டக் காலாற் சிறந்த தேரினையும் வெல்லுங் குதிரையினையும் தலைமைபெற்ற மதகளிற்றினையும் வலிய தோளினையுமுடைய பகைவர் சேனை எ - று.

(5)

132. யானைமறம்

எழுமரவக் கடற்றானையான்
மழகளிற்றின் மறங்கிளந்தன்று.

(இ - ள்.) மிகும் ஆரவாரத்தால் நிறைந்த கடல்போன்ற சேனையினை யுடையான் இளங்களிற்றினது மறத்தைக் கூறியது எ - று.

வ - று. அடக்கருந் தானை யலங்குதார் மன்னர்
விடக்கு முயிரு 1மிசையக் - கடற்படையுள்
பேயு மெருவையுங் கூற்றுந்தன் பின்படரக்
காயுங் கழலான் களிறு.

(இ - ள்.) விலக்குதற்கரிய சேனையினையும் விளங்கும் கோவை மாலையினையுமுடைய அரசர் தசையினையும் உயிரினையும் உண்ண வேண்டிக் கடல்போன்ற சேனையுட் பேயும் கழுகும் கூற்றும் தனது பின் செல்ல வெகுளும், வீரக்கழல் வேந்தன் யானை எ - று.

பேயும் எருவையும் விடக்குண்ணப் பின்படரவென்க.

(6)

133. குதிரைமறம்

எறிபடையா னிகலமருள்
செறிபடைமான் றிறங்கிளந்தன்று.

(இ - ள்.) எறியும் வேற்படையுடையான்றன் மாறுபாட்டினைச் செய்யும் போருட் செறிந்த கலையினையுடைய குதிரையின் திறப்பாட்டைச் சொல்லியது எ - று.

வ - று. குந்தங் கொடுவில் குருதிவேல்கூடாதார்
வந்த வகையறியா வாளமருள் - வெந்திறல்


1. 'முணிய'