625 சாத்தன்+தந்தை-சாத்தந்தை ‘இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் மெய்ஒழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே.’ தொல். 347 என்பது விதி. ஆதன்+தந்தை-ஆந்தை; ‘ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு பெயர்ஒற்று அகரம் துவரக் கெடுமே.’ தொல். 348 என்பது விதி, யாவர்-யார்; யாது-யாவது; ‘பலர் அறி சொல்முன் யாவர் என்னும் பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை ஒன்றுஅறி சொல்முன் யாதுஎன் வினாவிடை ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் மருவின் பாத்தியில் திரியுமன் பயின்றே’ தொல், 172 என்பது விதி. விண்-வெள்-ஒல் என்பன உரிச்சொல்; இவை விண்ண வெள்ள-ஒல்ல என உயிரீறாயும், விண்-வெள்-ஒல் எனப் புள்ளியீறாயும் நின்றலின், ஒன்றன்கண் அடக்கலாகாமையின் தன்மை குறைந்து ‘நெறிப்பட வாராக் குறைச்சொல் கிளவி’ ஆயின. ஏனைப் பண்புத் தொகையும் வினைத்தொகையும் பிரித்துப் புணர்க்கும்வழித் தொகைப்பொருள் சிதைதலின் இவற்றைப் பிரித்துப் புணர்க்காது நின்றாங்கே கொள்க என்பது. |