பக்கம் எண் :

71

வணக்கத்திற்கு உரியவனாகக் கருதி வளைந்து அவன் தாளை வணங்குதலும் ஆகிய மூன்று திறமும்

‘உள்ளம் உரைசெயல் உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்துஇறை உள்ளில் ஒடுங்கே’.

என்று கூறியாங்கு ஒருசேர வேண்டலின் ‘மனம் மொழி மெய்களின் வணங்குதும்’ என்றார் அ ஆ முதலியவற்றின் பொதுப் பெயராகிய எழுத்து என்பது, தன்னை விடுத்துத் தன் இலக்கணத்தை உணர்த்தும்வழி தன்னொடு தொடர்பு உடைய பிறிது ஒரு பொருளைச் சுட்டுதலின் ஆகு பெயராம்.

இரண்டாம் வேற்றுமை உருபு உயர்திணைப் பெயர்க்கண் ஒழியாது வருதல் வேண்டும் என்பது விதி. ஆனால் செய்யுள் யாப்புக் கருதி ‘ஆடூஉ அறிசொல்’ என்பது போலச் சிறுபான்மை செய்யுள் விகாரத்தால் மறைந்தும் வருதல் கூடும். சூத்திரமும் எழுவகைச் செய்யுளுள் ஒன்று என்பது,

‘பாட்டுஉரை நூலே வாய்மொழி பிசியே
முதுசொல் அங்கதம்என்று அவ்வேழ் நிலத்தும்’.

என்ற தொல்காப்பிய நூற்பா அடிகளான் உணரப்படும்.

இலக்கண விளக்கச் சூறாவளி
எழுத்ததிகாரம்.
எழுத்தியல்.

எழுத்ததிகாரம் என்புழி அதிகாரம் முறைமை என்றார். அதிகாரம் என்ற வடசொற்கு அது பொருள் அன்மை தொல்காப்பிய விருத்தியில் கூறியவாற்றான் அறிக.