பக்கம் எண் :

88

‘எழுப்பப் படுதலின் எழுத்தே’. (ஒலி எழுத்து)

‘எழுதப் படுதலின் எழுத்தா கும்மே’.           மூ. வீ. எ. 1

‘எழுத்துஒலி வடிவுவரி வடிவையும் ஏற்கும்’ ,, 2

‘இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே.’ ,, 3

‘அதுமுதல் சார்புஎன லாம்இரு பாலன.’ ,, 4

முதலெழுத்துக்கள்

4. உயிரும் உடம்பும்என முதல்இரு வகைத்துஅவற்று
உயிர்ஈ ராறுமெய் மூவாறு என்ப
அம்முப் பானும் அதனது விரியே.

இது மேல்தொகையான் ஒன்றாகக் கூறிய முதல் எழுத்திற்கு வகையும் விரியும் கூறுகின்றது.

(இ-ள்.) உயிரும் ஒற்றும் என முதல் எழுத்து இரு பகுதியை உடைத்து என்றும், அவ்விரண்டனுள் உயிர் பன்னிரண்டு என்றும், மெய் பதினெட்டு என்றும் அவ்விரண்டன் பகுதியாகிய முப்பது எழுத்தும் முதல் எழுத்தினது விரியாம் என்றும் கூறுவர் ஆசிரியர் என்றவாறு. 4

விளக்கம்: முதல் எழுத்து-தாமே தனித்து இயங்கும் எழுத்து. உயிர் பன்னிரண்டும் தாமே தனித்து ஒலிப்பன. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ ஆதலின், மெய்கள் அகரத்தொடு சிவணித்தாம் ஒலிப்பன, ஏனைய எழுத்துக்கள் மொழியிடைப் படுத்தே பெரும்பாலும் ஏனை எழுத்துக்களின் சார்பால் ஒலிக்கவும், இவை அச்சார்புஇன்றித் தாமே தனித்து ஒலிக்கும் ஆற்றல் உடையன ஆதலின் முதலெழுத்து எனப்பட்டன.