ஆகலானும், அவ்விகுதி பிற பெயரொடு கூடி விகுதிப் பொருள் உணர்த்தாவிடினும் அகத்தியன் தொல்காப்பியன் முதலாய உயர்திணைப் பெயரொடு கூடியவழி உணர்த்துமெனின், தேடப்படுவன எல்லாம் தேட்டம் ஆயினாற்போல் அகத்தியன் முதலாய அவரால் செய்யப்படுவன எல்லாம் அகத்தியம் எனவும் தொல்காப்பியம் எனவும் கபிலம் எனவும் பெயர் பெறல் வேண்டும்; அவ்வாறு அவர் செய்த தவம் முதலாய பிறவற்றுக்கெல்லாம் பெயர் ஆகாமல் அவர் செய்த நூல்களையே உணர்த்தலானும் அதுவும் பொருந்தாமையானும், செய் என்பது எல்லாத்தொழிற்கும் பொது ஆவது அன்றி நூல் செய்தற்கு மாத்திரம் பெயராகாமையானும் என்பது” என்று அரசஞ் சண்முகனார் பாயிரவிருத்தியில் (பக்கம். 233, 234) உரைத்தனவற்றை உட்கொள்க. நாள்மீனின் பெயர் அந்நாள்மீனுக்கு உரிய கிழமைக்குப் பெயராதலை நச்சினார்க்கினியர் பொருளதிகார முதல் நூற்பாவுரையுள் சுட்டியுள்ளார். அன்மொழித்தொகை ஆகுபெயருள் ஒரு கூறு என்று சேனாவரையர் கருத்தை உட்கொண்ட இவ்வாசிரியர் அவர் கூறியாங்குப் பொற்றொடி முதலாயின ஆகுபெயர் ஆதல் தன்மை கொண்டு ஆகுபெயருள் அடக்கப்பட்டன எனவும், தொகையாதல் தன்மை கொண்டு தொகைச்சொற்களோடும் கூறப்பட்டன எனவும் குறிப்பிடுகிறார். கனங்குழை - ஆகுபெயர். குறள்.(1091) என்ற பரிமேலழகர் கருத்து இந்நூலின் பிற்சேர்க்கையில் அரசஞ் சண்முகனார் கட்டுரை கொண்டு விளக்கப்பெறும். ‘மக்கட் சுட்டு’ என்பது பற்றிய பலர் கருத்துக்களும் ‘உயர்திணை என்மனார்’ என்ற நூற்பாவில் சுட்டப்பட்டன. இவ்வாசிரியர் சேனாவரையரைப் பின்பற்றும் தம்கருத்துக்கு ஏற்பப் போந்த பொருள் கொண்டு மக்களாகிய மக்கள் |