தகுதியாவது சோற்றை உண்டான் என்புழிச்சோறு என்னும் பதம் வருமொழிகளோடு புணர்தற்கு முன்பே தானே தனித்து ஓர் ஆதாரம் இன்றியே நிற்பினும், இறிஞி, மிறிஞி போலப் பொருளற்ற சொல் அன்றாய்ப் பொருளும் வினைமுதல் கருவி முதலியபொருள் அன்றாய், இன்னும் பல குணங்களோடு கூடிநிற்றல். “அவாய்நிலையாவது அத் தனிப்பதம் தனக்கு உரிய ஐஉருபையே விரும்புதலும் அன்றி ஒரு வினைச்சொல்லையும் விரும்புதல் முதலிய அவாவோடு கூடிநிற்றல். அண்மைநிலை ஆவது சோறு கடல் முழங்கிற்று உண்டான் என இடையில் பிறசொற்கள் வந்து பொருந்தற்கு இடம்கொடாமல் தம்முள் அணுகிச் சோற்றை உண்டான் என நிற்றல். இவ்வண்மைநிலை இலக்கணம் உணராதார் இடையில் பொருத்தில், அதனைச் சான்றோர், ‘ஒன்றனையும் குற்றம் கூறோம்’ என்னும் நியமத்தால், ‘யாப்புவிதி நோக்கி வந்தது’ என்றும், இன்னும் யாதானுமொரு பெயரை யிட்டுச் சோற்றை உண்டான்- கடல்முழங்கிற்று- எனப் பிரித்து வேறு தொடராக்குவார். இதனை சிலர் மறுப்பர்; அஃது எங்ஙனமெனின், நாற்குலத்தலைவரும் நாற்குலக் குலமகளிரும் தனித்தனியே இருவர் இருவராய்க் கிடப்பின் புல்லுதல் கூடும் இம்முறை அன்றி, நான்கு தலைவரும் ஒருநிரையே, பின்பு நான்கு குலமகளிரும் ஒருநிரையேயாக எண்மரும் ஒரு முறையே கிடப்பின் புல்லுதல் தொழில் கூடாது. இவ்வுவமை முதலாகப் பல உவமைகளைக் காட்டிச் சொல்தொடர்பு உண்டு என்றல் மாத்திரமே அன்றிப் பொருள் தொடர்பு சிறிதாயினும் கூடாது என்று உபமேயம் கூறி மறுப்பர். இவ் |