கண்- இடம் என்ற பொருளில் வந்தால் பெயர்; உறுப்புக்களுள் ஒன்றனைக் குறிக்குங்காலும் பெயரே. இங்ஙனமே ஐ வியப்பு என்ற பொருளில் வருங்கால் உரிச்சொல்; தலைவனைக் குறிக்குங்கால் பெயர். ஒடு, ஆல் என்பன மரம் முதலியவற்றையும், ஓடு மட்கலம் முதலியவற்றையும், கு நிலத்தையும், இல் இருப்பிடத்தையும், அது சுட்டுப் பெயரையும் குறிக்குமிடத்துப் பெயராதலும் இவை உருபின் பொருள்பட வரும் இடங்களிலேயே உருபு ஆதலும் காண்க. தட்டுப்புடை- தட்டுப்போர்- இருவர் செய்யும் போர். ‘தட்டுப்போர் அதனுள்’ சூளா. அரசி. 195 இதுவினைசெய் இடத்திற்கு எடுத்துக்காட்டு. மாடத்தின்கண், கூதிர்க்கண் என்பன முறையே நிலப் பொருளுக்கும் காலப் பொருளுக்கும் எடுத்துக்காட்டு. நச்சினார்க்கினியர், உரையாசிரியர், நன்னூலார் முதலாயினார் கண்கால் முதலியவற்றை உருபு என்றே கொண்டனர். தெய்வச்சிலையார், ‘இவையெல்லாம் பெயரைச் சாராது தனித்தனி வரின் பெயராகி உருபு ஏற்கும், பெயரைச் சார்ந்து இடமும் காலமும் ஆகிய பொதுமை உணரவரினும் உருபுமாத்திரமாகி நிற்கும்; இடம் வேறுபாடு உணரவரின் உருபு புலப்படாது பொருள் உணர வரும்’ என்று கூறி விளக்கினார். தொல்.சொல்79. உரை இவ்வாசிரியர் சேனாவரையரைப் பின்பற்றியே இந்நூற்பாவிற்கு உரைவிளக்கம் தந்துள்ளார். ஊர்ப் புறத்து- ஊர் அகத்து- கைவலத்து- என்புழிப் புறம்- அகம்- வலம் என்ற சொற்கள் அத்துச்சாரியை பெறுதலானும், உருபு சாரியை ஏற்றல் இன்மையானும், கண் முதலாயின வேறுவேறு பட்ட இடப்பொருளை உணர்த்துமேயன்றி ஏனைய வேற்றுமை உருபுகண் போலப் |