‘எல்லாச் சொல்லும் உரிய என்ப.’ என்று புறனடை ஓதல் வேண்டிற்று. “இவற்றுள் ஆறாம் வேற்றுமை உருபு புலப்பட்டவழிப் பெயரொடு முடிந்தும், புலப்படாத வழிச் சிறுபான்மை வினைக் குறிப்போடும் வினையோடும் முடிந்தும், ஏனைய வேற்றுமைகள் எல்லாம் வினையோடும் வினைக்குறிப்போடும் முடிந்தும் வருதலான் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் வேற்றுமைக்கு முடிபாம் என்று கொள்க. அவ்வழி வினையும் வினைக்குறிப்பும் ஆகிய சொற்கள் இறுதி நின்ற பெயரோடும் முடிவுழிப் பெயரெச்சமாகியும் தனிவரின் முற்றாகியும் வரும் என்று கொள்க. இச் சூத்திரத்தானே வேற்றுமைக்கு முடிபு கூறினாரும் ஆம்” என்று குறிப்பிட்டார். இனி, சூத்திரவிருத்தியில் இந் நூற்பாவின் தொடர்பாகச் சிவஞானமுனிவர் உரைப்பன பின் வருமாறு: “வேற்றுமைத் தொகைவிரியுமாறு ‘வேற்றுமைப்பொருளை விரிக்குங்காலை’ என்னும் சூத்திரத்தால் பெறப்பட்டதாலோ எனின் ‘வேற்றுமைத்தொகையை விரிக்குங் காலை’ என்னாமையானும், எச்சவியலுள் கூறும் வேற்றுமைத் தொகை விரியுமாறு வேற்றுமை இயலுள் கூறுதற்கு ஓர் இயைபு இன்மையானும், வேற்றுமை இயலுள் உருபும் பொருளும் உருபு நிற்கும் இடமும் மாத்திரையே கூறி ஒழிந்தார் அன்றி வேறொன்றும் கூறாமையானும், வேற்றுமைத் தொகை விரியுமாறு ‘வேற்றுமை இயல’ என்பதனால் பெறப்படுதலின் வேறு கூறவேண்டாமையானும், வேண்டுமெனின் பால்மொழி என்னும் உவமத் தொகையும் பாலின் இனிமை போலும் இனிமையை உடைய மொழி என விரிதலின் உவமத் தொகைக்கண் சொற்பெய்து விரித்தற்கு வேறு சூத்திரம் கூறாமை குன்றக் கூறலாய் முடியும் ஆதலானும் அச்சூத்திரத்திற்கு அது பொருளன்று என்று ஒழிக. |