பெயர் அவாவிற்றேல் முற்றுச்சொல் எனப்படாது; அதனால் முற்றுச்சொல் பெயர்கொள்ளும் என்றல் மாறுகொளக் கூறலாம் எனின், அற்றன்று; உண்டான் சாத்தன் என்பது எத்தை என்னும் அவாய்நிலைக்கண் சோற்றை என்பதனொடு இயைந்தாற்போல, உண்டான் என்பது யாவன் என்னும் அவாய்நிலைக்கண் சாத்தன் என்பதனொடு இயைவது அல்லது அவாய்நிலை இல்வழி உண்டான் எனத் தானே தொடராய் நிற்றல் முற்கூறிப் போந்தாம் என்பது.அஃதேல், சாத்தன் என்னும் பெயர் சோற்றை என்பது போல அவாய் நிற்றலை உள்வழி வருவதாயின், ‘எத்திறத்தானும் பெயர் முடிபினவே’ என விதந்து ஓதல் வேண்டா பிற எனின், நன்று சொன்னாய்; அவாய் நிற்றலை உள்வழி வருவது அவ்விரண்டற்கும் ஒக்குமேனும், உண்டான் என்ற வழி உண்டல் தொழிலால் செயப்படுபொருள் உய்த்து உணர்ந்து பின் அதன் வேறுபாடு உணரச் சோற்றை என்பது வந்து இயைவது அல்லது, சொல் கேட்ட துணையான் எத்தை எனக் கேட்பான் செயப்படு பொருள் வேறுபாடு அறிவதாக அவாவாமையின் சோற்றை என்பது வருதல் ஒருதலை அன்று: இனி உண்டான் என்னும் சொல்லான் பொது வகையான் வினைமுதல் உணர்ந்து கேட்பான் அதன் வேறுபாடு அறிய அவாவுதலின் சாத்தன் என்பது வருதல் ஒருதலை ஆதலான் அச்சிறப்பு நோக்கி விதந்து ஓதினார் என்பது. 4 |