‘எவ்வயிற் பெயரும்’ (198) என்ற நூற்பா (தொல்.சொல்.68) முடிக்கப்படும் பெயர் மறைந்தும் இருக்கலாம் என்பதற்கு ஓத்து. சாத்தன் வந்தான்- எழுவாய்த் தொடர்; ஈண்டுச் சாத்தன் என்னும் பெயர் முடிக்கப்படும் சொல்; வந்தான் என்பது சாத்தன் என்பதனை முடிக்கும் சொல். வந்தான் சாத்தன்- வினைமுற்றுத் தொடர்; ஈண்டு வந்தான் என்னும் வினை முடிக்கப்படும் சொல்; சாத்தன் என்பது வந்தான் என்பதனை முடிக்குஞ் சொல். முடிக்குஞ் சொற்குத் தனி விதியும் முடிக்கப்படுஞ் சொற்குத் தனி விதியும் கூறல் வேண்டும் என்பது. முற்றுச்சொல் அவாவிய வழியே செயப்படு பொருள் போல எழுவாயும் வரும் ஆதலின், முற்றுச்சொல் தன் பொருள் புலப்படுத்துவதற்கு எழுவாய் வருதல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஆனால் முற்றினால் வினைமுதல் பொதுவாக உணரப்பட்டுச் சிறப்பு வகையான் உணர்தற்கு உரிய வாய்ப்பு மிகுதியும் உண்மையின் ‘எத்திறத்தானும் பெயர் முடிபின’ எனப்பட்டது. இவ்விளக்கம் முழுவதும் தொல்காப்பியச் சொற்படல 215ஆம் நூற்பாவிலும் 429 ஆம் நூற்பாவிலும் சேனாவரையர் உரைத்தனவேயாம். |