நிறுத்த முறையானே முற்றுவினையை விரித்து உணர்த்துவான் தொடங்கினவற்றுள், இஃது உயர்திணை முப்பால் படர்க்கை வினைமுற்று ஆமாறு கூறுகின்றது.இ-ள்: அன்னும் ஆனும் ஆகிய இருவகை விகுதியையும் ஈறாக உடைய வினை வினைக்குறிப்பு மொழிகள் ஆண்பால் படர்க்கையினையும், அள்ளும் ஆளும் ஆகிய இருவகை விகுதியையும் ஈறாக உடைய வினை வினைக்குறிப்பு மொழிகள் உயர்திணைப் பெண்பால் படர்க்கையினையும், அர்ரும் ஆரும் பகரத்தை ஏறிய அகரமும் மாரும் ஆகிய நால்வகை விகுதியையும் ஈறாக உடைய வினை வினைக்குறிப்பு மொழிகள் உயர்திணைப் பல்லோர் படர்க்கையினையும் விளக்கும். அத்தன்மையவாகிய வினைமுற்றுச் சொற்களுள் மார் ஈற்றுத் தெரிநிலை வினைமுற்றுச்சொல் வினை கொண்டு முடியும் ஆயினும் முற்கூறிய பல்லோர் படர்க்கை வினைமுற்றொடு ஒக்கும். வினை கோடலான் முற்று எச்சமாய்த் திரிந்தது எனப்படாது; வினையொடு அல்லது பெயரொடு அது முடியாமையின் என்றவாறு. ஆண்பால் பெண்பால் பல்லோர்பால் எனவே, திணை உயர்திணை என்பதூஉம் பெற்றாம். மேல் பதவியலுள் கூறிய இடைநிலை வகையானே அன் முதலிய ஆறும் மூன்று காலமும் பற்றி வரும். ஈற்றுவகையானே பகர ஈறும் மார்ஈறும் எதிர்காலம் பற்றி வரும். அங்ஙனம் வருவழி அன் ஈறு இறந்த காலம்பற்றி வருங்கால், |