சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

290 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

யார் என்பதன் பாற்பொதுமை
 

233 யார்என் வினாவினைக் குறிப்புஉயர் முப்பால்.  

இஃது உயர்திணை வினைக்குறிப்பினுள் ஒன்றற்குப் பால்வகையான் பொதுமை
கூறுகின்றது.

இ-ள்: யார் என்னும் வினாப்பொருளை உணர்த்தும் வினைக்குறிப்பு முற்றுச்சொல்
உயர்திணை மருங்கின் மூன்று பாற்கும் உரித்து என்றவாறு.

முப்பாற்கும் உரித்து என்பார் ‘முப்பால்’ என்றார், சொல்லொடு பொருட்கு
ஒற்றுமை உண்மையான். ‘இழி இருபால்’ என்பதற்கும் இவ்வுரை கொள்க.

வரலாறு: அவன்யார், அவள்யார் அவர்யார்-என வரும்.
 

  ‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெம்
கோதைகூட்டு உண்ணிய தான்யார்மன்- போதெலாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு.’
 
என்புழி வண்டுதான்யார் என அஃறிணைக் கண்ணும் சிறுபான்மை வருதல் உரையிற்
கொள்க; திணைவழுவமைதி என்றலும் ஒன்று.
 

விளக்கம்
 

ஆர் ஈறு பலர்பாலைக்காட்டும் ஈறு எனினும், யார் என்னும் வினைக்குறிப்பினுள்
அது முப்பாலுக்கும் பொது என்பது. சொல்லைப் பொருள் உணர்தற்குக் கருவியாகக்
கோடலேயன்றி, அவை பிரிக்க முடியாத தொடர்பு உடையன என்பதும் இவ்வாசிரியர்
கருத்தாகக் கொள்க.

தொல்காப்பியனார் காலத்தில் உயர்திணை மூன்றுபாற்குமே இந்த யார் என்ற
குறிப்புமுற்று உரிமை பூண்டு நின்றது, பிற்காலத்தில் இது பொதுவினையாயிற்று.