சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-9303

செய்தல் வேறுபாடு ஆகலின் பொதுவாகிய செய்தல் எல்லாத்தொழிலையும்
அகப்படுத்தி நிற்றலான் அவை பொதுவும் சிறப்பும் அல்லவேல் என் செய்யா நின்றான்
என்று வினாயவழி, உண்ணா நின்றான் என்று செப்புதல் இயையாதாம் என்க. இது
செய்த- செய்து- முதலியவற்றிற்கும் ஒக்கும். இருதிணைக்கும் பொதுவாயதொரு பொருள்
இன்மையான் அதனான் நிகழும் விரவுத்தொழில் என்பது ஒன்று இன்றால் எனின்,
அவ்விரவுத் தொழிலைக் கூறுகின்றவன் அதனை நிகழ்த்திய வினைமுதல் உயர்திணை
அஃறிணை என்பது உணர்ந்தே கூறுமாயினும், பால்காட்டும் ஈறின்மை காரணத்தான்
கேட்டோன் உணர்வு இருதிணை வினைமுதல் மேலும் ஒருங்கு சேறலின்,
அவ்வினைமுதல் பொருண்மையான் நிகழும் விரவுத் தொழிலும் உளதாயிற்று என்க. 10
 

விளக்கம்
 

நிறுத்தமுறை- 229ஆம் நூற்பாவில் நிறுத்தமுறை.
                     தன்மை- தன் தொழிலை உணர்த்துவது.
                    முன்னிலை- தனக்கு எதிர்முகமாக நின்ற பொருளின் தொழிலை உணர்த்துவது.

வியங்கோள்- ஏவலைக்கொள்ளுவது. வியங்கோள் வாழ்த்துதல், வைதல்
வேண்டிக்கோடல் முதலிய பிற பொருளும் பற்றி வருமேனும் மிகுதி பற்றி ஏவற்
பொருட்கண் வந்தது எனப்பட்டது.

உண்டு- ஒரு பொருளின் உண்மைப்பண்பைச் சுட்டும் உண்டு என்ற பொதுவினை-
தொல்காப்பியனார் காலத்தில் உளன் உளள் உளர் உள என்றாற்போல அஃறிணை
ஒருமையை மாத்திரம் உணர்த்தும் ‘உண்டு’ என்ற குறிப்பு முற்று இருந்தது. பிற்காலத்தில்
இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாகிய உண்டு என்ற பொதுக்குறிப்பு
முற்றும் இடம் பெறலாயிற்று.