சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

312 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

என்பதனான், தன்மையும் அஃறிணையும் விரவி ஒரு வினை கோடல் வழா நிலையேயாம். சாறும் என்பதனை, சால்+தும் என்று பிரித்துப் புணர்க்க.
 
  காண்கு வந்தேன்- காண்கு- தன்மை ஒருமை வினைமுற்று.
காண்கும் வந்தேம்- காண்கும்- தன்மைப் பன்மை வினைமுற்று.
பெயர்த்தனென் முயங்க- தன்மை முற்று,
சேந்தனை சென்மோ- முன்னிலை முற்று.
மோயினள் உயிர்த்த காலை- படர்க்கை முற்று.
 

பெயர்த்தனென், சேந்தனை, மோயினள் என்ற தன்மை முன்னிலை படர்க்கை
முற்றுக்கள் வினைகொண்டு முடிந்தவழி, அவை முற்றெச்சம் எனப்பட்டன; ஆயின்,
காண்கு- காண்கும்- என்பன வினைகொண்டு முடிந்த வழிபும், அவற்றை முற்றெச்சம்
என்னாது முற்று என்றே கொள்ளுதல் வேண்டும்.

இரு சாரன- செய்கு என் முற்றும், மூவிட முற்றுக்களும். செய்கு என்பது எதிர்கால
முற்று; அதனை இறந்த காலத்திற்கு உரிய செய்து என்னும் வாய்பாட்டு
வினையெச்சமாகத் திரித்தல் இயலாது; செய என் எச்சமாகத் திரித்தால், செய என் எச்சம்
தன் வினைமுதல் வினையும் பிற வினைமுதல் வினையும் கொண்டு முடிவதுபோலச்
செய்கு என்ற முற்றின் திரிபும் அவ்விரு வினைகளையும் கொண்டு முடிதல் வேண்டும்.
செய்கு என்பதோ தன் வினைமுதல்வினையைத்தான் கொண்டு முடியும்; முடியவே, எந்த
எச்சமாகவும் திரிப்பதற்கு ஏலாமையின் செய்கு- செய்கும்- என்பனவற்றை முற்றாகவே
கொண்டுவிட்டார். இவ்வினைமுற்றுக்கள் பிற்காலத்தில் சிறுபான்மை பெயர்கொண்டு
முடியும் என்பதும், விகுதிகள் உடன்பாடு மறை என்ற இரண்டற்கும் பொது ஆதலான்
மறைவாய்பாடுகளும் கொள்ளப்படும் என்பதும் கூறப்பட்டன.