எஞ்சு- உரிஞ்- ஓடு- என்பனவற்றொடு செய்து என்னும் வாய்பாட்டு உகரம் சேர்ந்து எஞ்சி- உரிஞி- ஓடி- என இகர ஈற்று வினையெச்சங்களை உண்டாக்கியது. ஆ- போ- என்பனவற்றோடு அவ்வுகரம் சேர்ந்து ஆய்- போய் என்ற யகர ஈற்றுவினையெச்சங்களை உண்டாக்கித் தான் கெட்டது. சினந்து, உரைத்து, இருத்தி, உடுத்து, பரவி, தாவி, ஆகி என்பன, திரி சொற்களாய்ச் சினைஇ- உரைஇ- இரீஇ- உடீஇ- பராஅய்- ஆஅய் என்றாயின. ஆ-போ- என நச்சினார்க்கினியரை ஒட்டி முதற்கண் கூறிப் பின் சேனாவரையரை ஒட்டி ஆகு-போகு- என்பன குற்றியலுகர ஈற்றுச் சொற்களாம் என்ற கருத்தும்கொண்டு ஆகு-போகு- ஓடு- மலர்த்து- ஆற்று- என்ற குற்றியலுகர ஈற்றுப் பகுதி யடியாகச் செய்து என் எச்சம் இகர ஈறாகத் திரிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இகர ஈறும் யகர ஈறும் பொருள்பற்றி உரிஞி- உரிஞு தலைச்செய்து எனவும், ஆய்- ஆதலைச்செய்து எனவும், செய்து என்வாய்பாட்டினவாகவே இருத்தலானும், அவற்றின் எதிர்மறை உரிஞாது- ஆகாது- என உகர ஈற்றனவாகவே வருதலாலும், செய்து என்னும் வாய்பாட்டின்கண் உகர ஈறு பயின்று வருதலானும் இகரமும் யகரமும் உகரத்தின் திரிபு என்று கொள்ளப்பட்டன. செய்து என் எச்சம் சிறுபான்மை நிகழ்காலமும், செய்பு என் எச்சம் சிறுபான்மை நிகழ்காலமும், செய என் எச்சம் காரணகாரியப் பொருண்மைக்கண் இறந்த காலமும், தன் எழுவாயின் செயலைத் தெரிவித்தற்கண் எதிர்காலமும் காட்டுதலும், |