எச்சங்கள் பொதுவினையாதலின், கிழவன் பிரிந்து கிழத்தி வருந்தினாள் என்புழிப் பிரிந்து என்ற செய்து என் எச்சமாய்ப் பிரிய என்ற செயவென் எச்சம் திரிந்தது என்று கூறற்கண் ஏதம் இன்று. ஆனால் வினைமுற்றுக்கள் ஈற்றான் திணைபால் முதலியன காட்டும் சிறப்புவினைகள் ஆதலின், அவை எச்சங்களின் திரிபாய் வந்து பொதுநிலை மாறிச் சிறப்புநிலை எய்தின என்றல் அவ்வளவு பொருத்தமாக இல்லை. மேலும், கண்ணியன் என்ற வினைமுற்றைக் கண்ணியனாய் என்ற எச்சமாக்குதல் எளிது; ஆனால் கண்ணியன் என்ற வினைமுற்று எவ்வெச்சத்தின் திரிபு என்பது இன்னும் விடையிறுக்க இயலாத தொன்று; ஆதலின் முற்றே எச்சமாகும் என்பார் பக்கமே வலியுடைத்து. இந்நூற்பாவின் எடுத்துக்காட்டுக்கள் ‘வினைமுற்றே வினையெச்ச மாதலும்’ என்ற நன்னூல் 350ஆம் நூற்பா உரையுள் மயிலைநாதர் காட்டியவற்றுள் பெரும்பான்மையவற்றை உட்கொண்டு வரையப்பட்டன. எச்சம் முற்றாய்த் திரிந்ததன்று என்ற கருத்து ‘வினைஎஞ்சு கிளவியும்’ (தொல்.சொல்.457) என்ற நூற்பாவில் சேனாவரையர் உரைத்த உரையை உட்கொண்டு வரையப்பட்டது. |