“இருதிணைப் பொருளுமாவன ஐம்பாற் பொருளின் பகுதியாகிய காட்சிப்பொருளும் கருத்துப் பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத்திணையுமாம். இவையெல்லாம் ஐம்பாலாய் அடங்கின. “இனி, பொருள் தன்மையாவது மக்கள் தன்மையும் இயங்குதிணைத் தன்மையும் நிலைத்திணைத் தன்மையுமாம் இத்தன்மை, ஒருபொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்கு கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள் தொறும் நிற்கும் என்று உணர்க. “கருவியாவது அப்பொருள் தன்மையை ஒருவன் உணர்வதற்கு இவ்வோசை கருவியாய் நிற்றல். இதனை ஐம்பொறிகள் ஒருவன் பொருளை உணர்தற்குக் கருவியாய் நின்றாற் போலக் கருவியாய் நிற்கும் என்று உணர்க. ஒருவர் பொருள் தன்மையை உணர்தற்குச் சொல் கருவியாய் நிற்றல் அன்றித் தனக்கு ஓர் உணர்வு இன்மையின் தான் ஒரு பொருளைக் கருதி நிற்றல் இன்று” நச்சினார்க்கினியர். (தொல்.சொல்.1) ‘சொல் என்றது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள் தன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையாகிய பெயர்வினை இடைஉரி என்னும் நால்வகைச் சொல்லும் பிறவுமாம். பொருட்டன்மையாவது ஒரு பொருட்குக் கேடு பிறந்தாலும் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய் பலவகைப்பட்ட பொருள்தொறும் நிற்கும் என்று உணர்க’ சங்கர நமச்சிவாயப்புலவர். (நன். சொல்-பாயிரம்) “சொல்லெல்லாம் உரிச்சொல்லேயாம். உரிச்சொல்லாவது பொருளும் தானும் பேதமின்றி அபேதம் ஆதற்கு உரியசொல். குடம் அறியாதானுக்குக் குடத்தைக்காட்டி ‘இது குடம்’ என்றால், இது என்னும் சுட்டுப்பெயரும் குடம் என்னும் பொருளும் பேதமின்றி அபேதமாய்த் தோன்றும் |