சாத்தன் வருதற்கும் உரியன் என்பது வாராமைக்கும் உரியன் என எதிர்மறையை ஒழிபாக உடைத்தாய் நிற்றலின் எதிர்மறை எனவும், ‘ஒன்று இரப்பான்போல்.......அன்னான் ஒருவன்’ என்புழி இன்னான் என்று துணியாமைக்கண் வருதலின் ஐயம் எனவும் நச்சினார்க்கினியர் (தொல். சொல். 257) தந்துள்ள விளக்கம் நோக்கி உண்மை உணர்க. இதுவே சேனாவரையருக்கும் கருத்தாதல் (தொல்.சொல்.255) உணர்க. திருமகளும் அல்லள் அரமகளும் அல்லள் இவள் யாராகும் என ஆராய்தற்கண் வருதலின் தெரிநிலை உம்மை என்ற சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரையும் காண்க. நெடியனும் வலியனும் ஆயினான் என்புழி, உம்மை ஆக்கம் குறித்து நின்றது என்று உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைத்தது நோக்குக. முற்றும்மை எச்சப்படுவது விதிவினைக்கண் இன்று என்றுகூறும் முனிவர் ‘ஆறும் தருவது வினையே’ (நன்.320) என்பதை எச்சப்படுத்தி, உயர்பு சிறப்பும்மை எனப் பெயரிட்டு ‘எட்டும் தருவது வினையே’ என்று விளக்கம்கொண்ட விந்தையும் நோக்குக. தாம் கொள்வது நேரிது எனவும், அதனையே பிறர்கொள்வது தவறு எனவும் கொண்ட கொள்கையின் நேர்மையும் நோக்குக. |