இலக்கணவிளக்க ஆசிரியர் சேனாவரையர் கூறியதனை உட்கொண்டு முதற்கண் துணியப்படாத பொருட்கண்ணும் பின்பு துணியப்பட்ட பொருட்கண்ணும் அன்மையை வைத்து எடுத்துக்காட்டுக்கள் தந்து விளக்கித் “துணியப்படாத பொருட்கண் வரும் ‘குற்றியன்று மகன்’ முதலாகிய தொடர்க்கண் இறுதிக்கண் வரும் மகன் முதலாகிய சொற்களை முடிக்குஞ் சொற்களாகக்கொண்டு முடிக்கப்படும் சொற்களாகிய இவன் முதலிய தோன்றா எழுவாய்களை வருவித்து முடிக்க” என்று சேனாவரையர் உரைத்தாங்கு உரைத்தார். ‘குற்றியல்லன் மகன்’ என்ற தொடரில் குற்றி என்ற அஃறிணைச்சொல் அல்லன் என்ற சொல்லின் பகுதியாகிய அன்மையைக்கொண்டு முடியுமாற்றைச் சேனாவரையர் உரையைப் பின்பற்றி விளக்கினார். நச்சினார்க்கினியர் ‘இவ்வுருவு குற்றியல்லன் மகன்’ என்ற தொடரில் ‘இவ்வுருவு என்ற சொல் அல்லன் என்ற சொல்லொடு கூடி முடியாது’ என்று குறிப்பிட்டதை உட்கொண்டு, உருவு முதலியன ஐயப்புலப் பொதுச் சொல்லாய் வருதல் வேண்டும் என்பதே விதியன்றித் துணி பொருட் கண்ணும் வருதல் வேண்டும் என்பது விதியன்மையின் இவ்வுருவு என்ற சொல் இல்லாமலேயே அச்சொற்றொடர் இயங்கும் என்பதை விளக்கினார் இவ்வாசிரியர். ஆண்மகன்கொல்லோ பெண்மகன்கொல்லோ இஃதோ தோன்றுவார்- ஒன்றோ பலவோ செய்புக்கன, பெற்றம்- என்பன வழா நிலை அல்லவேனும் ஐயத்துக்கண் வருதலின் வழுவனமதியாகக் கொள்க என்பதனை விளக்கியுள்ளார். |