சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-3505

கண் நொந்தார்- தோள் நொந்தார்- முலை நொந்தார்- புருவம் நொந்தார்- காது
நொந்தார்- எனவும்,
 

  ‘கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பாடு இலவாய்’
 


தொல்.சொல்.61
முதற் பொருள் ஒன்றாயின் ஒருமையானும், பலவாயின் பன்மையானும் முடிதலும் கொள்க.

கோடு கூரிது களிறு- குளம்பு கூரிது குதிரை- என அஃறிணைப் பன்மைச் சினைப்
பெயர் நின்று முதல் வினையாகிய ஒருமையான் முடிந்தனவும் ஒன்றென முடித்தலால்
கொள்க.

உடைப்பொருளும் உடையானும்- இடமும் இடத்து நிகழ்பொருளும்- காலமும்
காலத்து இயலும் பொருளும்- அவயவமும் அவயவியும்- குணமும் குணியும்- வினையும்
வினைமுதலும்- ஆகிய இயைபு உடைமையான், அதுபற்றி உடைப்பொருள்
முதலியவற்றின் இயல்பை உடையான் முதலிய பொருள்மேல் ஏற்றி அவற்றின்
வினையான் முடிப்பினும் அமையும் எனத் திணைவழு அமைத்தவாறு ஆயிற்று. 3
 

விளக்கம்
 

வழுக்காத்தலாவது தவறு உண்டாக்காமல் பரிகரித்தல். அது வழுவற்க என்றலும்,
வழு அமைத்தலும் என இரு வகைப்படும். குறித்த பொருளை அதற்கு உரிய சொல்லால்
சொல்லுக என்றல் வழுவற்க என்றலாம். குறித்த பொருட்குரிய சொல் அன்று ஆயினும்
ஒருவாற்றான் அப்பொருள் விளக்குதலின் அமைக என்றல் வழு அமைத்தலாம்.