சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-4513

பாணன் பறையன் துடியன் கடம்பன் என்ற நான்கு உயர்திணைச் சொற்களும்
நால்வர் என்ற உயர்திணைத் தொகைப்பெயர் கொள்ளாது ‘நான்கு’ என்ற அஃறிணைத்
தொகை பெற்றதன் காரணம், ஈண்டு எண்ணப்பட்டன பாண்குடி- பறையக்குடி- துடிக்குடி-
கடம்பக்குடி- என்ற குடிகளே என்பது சேனாவரையர் உரைகொண்டு விளக்கப்பட்டது.
நச்சினார்க்கினியர் இவை உயர்திணைப்பொருள் நின்று அஃறிணை முடிபு
பெற்றனவேயாம் என்பர்.

தண்ணளி- தாம்- தேர்- என்ற மூன்று சொற்கள் விட்டனர் என்ற உயர்திணை
வினைகொண்டதும், தான்- தேர் - பாகன் என்ற மூன்று சொற்களும் உண்டான் என்ற
உயர்திணை வினை கொண்டதும், தான்- தேர்- என்ற இரு சொற்கள் தோன்றாநின்றனன்
என்ற உயர்திணை வினை கொண்டதும், தலைமைப் பொருளாகிய தாம்- தான்-
என்பனவற்றிற்கு உரிய வினையே தலைமையில் பொருள்கட்கும் முடிபு ஆவதொரு
முறைமை பற்றியாம் என்பதும் சேனாவரையர் நச்சினார்க்கினியர் இருவர்தம்
கருத்தேயாம். நன்னூல் விருத்தி இவை சிறப்புப்பற்றி ஆண்பால் வினை கொண்டன
என்னும்.

எடுத்துக்காட்டுக்கள் பலவும் மயிலைநாதர் உரைத்தனவே.
 

சூறாவளி
 

‘தானும் தேரும் பாகனும் வந்துஎன்: நலன்உண்டாள்’ என்புழி வருதல்வினை
மூன்றற்கும் உண்மையான், ஆண்டு அமைக்க வேண்டுவது இன்று இனி,
அம்முப்பொருளின் வினையாகிய வந்து என்னும் செய்து என்எச்சம் உண்டான் என்னும்
ஒன்றன் வினைகொண்டு முடிதல் வினையெச்சமுடிபு ஆராய்ச்சிக்கண் பெறற்பாலது