எருத்தை நம்பி என்ற உயர்திண ஆண்பாற் சொல்லாகவும் கிளியை நங்கை என உயர்திணைப் பெண்பாற் சொல்லாகவும் கூறுதலும் உயர்ச்சி பற்றிய திணைவழுவமைதி.ஒருவனையும் ஒருத்தியையும் இவர் எனப் பலர்பால் சொல்லால் குறிப்பிடுவதும் நீயிர் வந்தீர் என்று பன்மை வாய்ப்பாட்டால் குறிப்பிடுவதும், ஒருவனோ ஒருத்தியோ ஒன்றோ ‘யாம்வந்தேம்’ எனத் தன்னைத் தன்மைப்பன்மைச் சொல்லால் சுட்டிக் கூறிக்கொள்வதும் ஒருமை பன்மைப் பால் வழுவமைதி. தோழியைத் தோழா என அருகி விளிப்பதும், தலைவனாகிய ஆண்பாலைத் தாய் என்ற பெண்மைச்சொல்லோடு புணர்த்துவதும் உயர்ச்சிக்கண் ஆண்பால் பெண்பால் மயங்கிய வழுவமைதிக்கு எடுத்துக்காட்டுக்களாம். கொற்றன்சாத்தன் என்பார் தலைமையில்லாப் பொதுமக்களே. இவர்களுக்கு உயர்வு என்றும் கிடையாது. சில இடங்களில் முகமனாக அவர்களைப் பெருங்கொற்றன், பெருஞ் சாத்தன் என இல்குணம் அடுத்துக் கூறுதலும் வழுவமைதியாம் என்பது சேனாவரையர். |