இஃது இடம் வழுவற்க எனக் காத்தலும் வழுவி அமைக என அமைத்தலும் நுதலிற்று. இ-ள்: தரலும் வரலும் கொடையும் செலவும் என்று கூறப்பட்ட இந்நான்கு வினைச் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் ஒரு மூவிடத்திற்கும் உரியனவாம்; அவ்வியல்பினவற்றுள் தரலும் வரலும் தன்மையையும் முன்னிலையையும், கொடையும் செலவும் படர்க்கையினையும் சென்று பொருந்தும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு இதனுள் ஈங்கு முதலாயின தன்மைக்கண்ணும் ஆங்கு முதலாயின படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன. வினைச்சொல் மூன்று இடத்திற்கும் உரிய ஆதல் வினையியலுள் பெறப்பட்டமையான் ஈண்டுக் கூறல் வேண்டா எனின், ஆண்டுப் பால் உணர்த்தும் ஈற்றான் இடத்திற்கு உரிமை கூறினார்; ஈண்டு ஈற்றான் அன்றித் தரல் முதலாயின முதல்நிலை தாமே இடம் குறித்து நிற்றல் உடைமையான், இவ்வேறுபாடு ஆண்டுப் பெறப்படாமையின் ஈண்டுக் கூறினார் என்பது. போதல் புகுதல் என்னும் தொடக்கத்தனவும் இக்காலத்துச் சில இடங்களில் பயின்றுவரும் ஆயினும் இந்நிகரன அன்றி ஏனைய எல்லாம் மூன்று இடத்திற்கும் பொது ஆதலின் இடம் சுட்டும் முதல்நிலை இவை நான்கும் என இவற்றையே வரைந்து ஓதினார் என்க. |