காரணமின்றியும் வழக்காறு பற்றி இறப்பொடு நிகழ்வும் எதிர்வும், எதிர்வோடு இறப்பும் நிகழ்வும் மயங்கும். மிக்கது-இருவினை; அம்மிக்கதன் மருங்கின்வினை-தவம் செய்தல் ஆகிய நல்வினை, தாயைக் கோறல் ஆகிய தீவினை. அதன்பயன்- தவம் செய்தலால் சுவர்க்கம் புகுதல், தாயைக் கோறலான் நிரயம் புகுதல்; எழுவாய் வெளிப்படையாக இருந்தால் சாத்தன் தவஞ் செய்து துறக்கம் புக்கான்- புகுவான் எனவும். சாத்தன் தாயைக்கொன்று நிரயம்புக்கான்- புகுவான்- எனவும் இறந்த காலத்தானும் எதிர் காலத்தானும் கூறுவர். எழுவாய் சிறப்பாக இல்லையேல், தவம் செய்தான் துறக்கம்புகும், தாயைக் கொன்றான் நிரயம்புகும் என நிகழ்காலத்தாலேயே கூறப்படும். இஃது என்றும் திரிபின்றி நிகழ்வதாகலின், தெய்வத்தானும் ஐம்பூத வேறுபாடுகளானும் திரிபு அடையும் இயற்கை தெளிவு என்பனவற்றின்கண் அடங்காதாயிற்று. இயற்கை- இயல்பு; இயல்பாவது இவ்விடத்து இது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது என்று வழக்காற்றான் அறிவது. பண்டுநாளை என்ற இறந்தகால எதிர்காலச் சொற்கள் முறையே விளையாடுவர், வந்தான் என்ற எதிர்கால இறந்தகாலச் சொற்களொடு முடிதல் உலகத்தில் வழங்கற்பாடு ஒன்றே காரணமாக வந்ததாதலின் இயல்பின் கண் அடங்காது. |