சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-11547

அறிபொருள் வினாவினை அறிவு ஒப்புக்காண்டல்- அவன் அறிவுதான் காண்டல்-
மெய் அவற்குக் காட்டல்- என்று மூவகையாகப் பிரித்து, அவற்றுடன் அறியான்
வினாவையும் ஐய வினாவையும் கூட்டி வினா ஐந்து வகைப்படும் என்றார் உரையாசிரியர்.
சேனாவரையர் வினாவினை அறியான் வினா- ஐயவினா- அறிபொருள் வினா-என்று
மூன்று வகையாகப் பகுத்துக்கொண்டார். நச்சினார்க்கினியர் வினாவினைச் சேனாவரையர்
போல மூவகைப்படுத்திப் பின் அறிபொருள் வினாவினை உரையாசிரியர் கருத்தை ஒட்டி
மூவகையாகப் பகுத்துக் கூறினார். நன்னூலார் அறிவு- அறியாமை- ஐயுறல்- கொளல்-
கொடை- ஏவல் என்று வினாவினை ஆறுவகையாகப் பகுத்துக்கூறினார். அதனையே
இவ்வாசிரியரும் பின்பற்றியுள்ளார். சின்னூல் உரையாசிரியர், உரையாசிரியரை ஒட்டி
வினாவகை ஐந்து என்றார்.

அறிபொருள் வினாவாவது ஆசிரியன் மாணாக்கனை வினவுவதும் மாணாக்கர்
தம்முள் வினவிக்கொள்ளுவதும் போல்வன. மாணாக்கர் தம்முள் வினவிக்கொள்ளுதல்
அறிவு ஒப்புக்காண்டல்- அவன் அறிவு தான் காண்டல்- என்ற கருத்துப் பற்றியும்,
ஆசிரியன் மாணாக்கனை வினவுவது அவன் அறிவுதான் காண்டல்- மெய் அவற்குக்
காட்டல்- என்ற கருத்துப் பற்றியும் ஆம் என அறிக.

அறியான் வினாவும் ஐய வினாவும் வழாநிலையாம். ஏனைய நான்கும்
வினாவாய்பாடு ஆதல் நோக்கி வழு அமைக்கப்பட்டன. மூன்று என்பார் சேனாவரையர்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்.’
‘அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்.’
தொல்.சொல்.13

நன்.385