சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

550 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: முற் கூறப்பட்ட இரண்டனுள் யாது என்னும் வினாச்சொல் அறியாப் பொருள் வினா ஆதலே அன்றி, அறிந்த பொருட்கண் ஐயம் நீக்குதற்கு ஆராய்ந்த சொல் ஆதலும் உரித்து என்றவாறு.

எ-டு: இம்மரங்களுள் கருங்காலி யாது? நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது? என வரும். நமருள் யாவர் போயினார்? அவற்றுள் எவ்வெருது கெட்டது? எனப் பிறவும் அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்த்தற்குத் தெரிந்த கிளவியாய் வருதலின் அவையும் ஈண்டே அமைக்கற்பால எனின், அவை அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்த்தற்கு அல்லது யாண்டும் வாராமையின் ஈண்டு அமைக்கப்படா என்பது. 13
 

விளக்கம்
 

யாது என்பதனுக்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி இது. அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும் இஃது அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்த்தற்கு வரும் வழுவமைதி சுட்டவே இவ்விருநூற்பாக்களும் எழுந்தன. ஏனைய அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்ப்பதற்கே வருவன. இந் நூற்பா உரை சேனாவரையர் உரையே.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘யாதுஐயம் நீக்கற் பொருளொடும் நிலையும்.’
தொல்.சொல்.32
மு.வீ.ஒ.66


விடைவகை
 

308. வினாய பொருள்அறிவு உறுப்பது செப்புஅது
செவ்வன் இறையும் இறைபயப் பதுவும்
எனஇரு வகைத்தாம் அவற்றுள்இறை பயப்பது
வினாஎதிர் வினாதலும் ஏவலும் மறுத்தலும்
உற்றது உரைத்தலும் உறுவது கூறலும்
நேர்தலும் சொல்தொகுத்து இறுத்தலும் என்னத்
தேரின் ஓர்ஏழ் திறன்உடைத்து என்ப.