இவை நேர்விடை அன்மையின் வழுவாய், ஒருவாற்றான் வினாய பொருளை அறிவுறுத்தலின் அமைக்கப்பட்டன. சேனாவரையர் செவ்வன்இறை- இறைபயப்பது- என்று செப்பு இருவகைப்படும் என்றார். உரையாசிரியர் செப்பு வினாஎதிர்வினாதல்- ஏவல்- மறுத்தல் உற்றதுஉரைத்தல்- உறுவதுகூறல்- உடன்படுதல்- என்று அறுவகைப்படும் என்றார். ‘இவ்வறுவகையுள் செவ்வன் இறை அடங்காது, மறுத்தலும் உடன்படலும் வினாவப்பட்டார் கண்ண அன்றி ஏவப்பட்டார்கண்ணேயே நிகழும்’ என்று உரையாசிரியர் கருத்தைச் சேனாவரையர் மறுத்தார். நச்சினார்க்கினியர் செவ்வன் இறை- இறை பயப்பது- என்று விடையை இருவகைப்படுத்தி, இறை பயப்பதன் வகையாக வினாஎதிர் வினாதல்- ஏவல்- மறுத்தல்- உற்றது உரைத்தல்- உறுவது கூறல்- உடன்படுதல்- சொல் தொகுத்து இறுத்தல்- சொல்லாது இறுத்தல்- என்ற எட்டனை விளக்கினார். இவ்வாசிரியர் அவற்றுள் ஏழனை நூற்பாவிலேயே சுட்டி, சொல்லாது இறுத்தலைத் ‘தேரின்’ என்ற மிகையாற் கொண்டார். தெய்வச்சிலையார் மணிமேகலையை ஒட்டி விடை வகைகளைத் துணிந்து கூறல்- கூறிட்டு மொழிதல்- வினாவி விடுத்தல்- வாய்வாளா திருத்தல்- என்று நான்கு வகையாகக் கூறி விளக்கினார். |