சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-17561

மரபு
 

311 எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.

 

இது முற் கூறிப்போந்த மரபாவது இத்தன்மைத்து என்று அதன் இலக்கணம்
கூறுகின்றது.

இ-ள்: யாது ஒரு பொருளை யாது ஒரு சொல்லான் யாது ஒரு நெறியான்
கல்வியால் நிறைந்த தொல்லாசிரியர் ஐம்பெருங்காப்பியம் எண்பெருந்தொகை
பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு முதலிய இலக்கியங்களுள்ளும் விரிந்த இலக்கண
நூலுள்ளும் வழக்கத்தும் கூறினார், அப்பொருளை அச்சொல்லான் அந்நெறியான் கூறுதல்
முற்கூறிப்போந்த மரபிற்கு இலக்கணமாம் என்றவாறு.

எனவே, தனிமொழி சமய ஆற்றலால் பொருள் உணர்த்தும் என்றதனை
வலியுறுத்திற்று என்பதூஉம் ஆயிற்று. உதாரணம் முன்னர்க் காட்டினாம்.
 

விளக்கம்
 

முற்கூறிப் போந்தது- 295 ஆம் நூற்பா.

மரபுக்குப் பற்றுக்கோடு சான்றோர் வழக்கும் செய்யுளும், அவ்விரண்டனையும்
உட்கொண்டு அமைந்த இலக்கணமும் என்பதாம். பத்துப்பாட்டு முதலியவற்றை இவர்
முறைமாற்றிக் கூறியுள்ளார்.

சமய ஆற்றல்- இச்சொல் இப்பொருள் உணர்த்துதல் வேண்டும் என்று
இறைவனுடைய நியமத்தால் உண்டாய செய்தி.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும் நன். 388, தொ.வி.82