சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-19567

  தெரிகணை எஃகம் திறந்தவாய் எல்லாம்
குருதி படிந்துண்ட காகம்- உருவிழந்து
குக்கில் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியார் அட்ட களத்து
களவழி.5

என ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும்,

மயிர் நல்ல- பயிர் நல்ல- என ஆக்கமும் காரணமும் இன்றியும் வந்தனவால்
எனின், முறையே களவுக் காலத்து அரியன கற்புக் காலத்து எளிய ஆயின என்பது
கருத்து ஆதலின் இக்காலம் காரணம் என்பது பெறப்படுதலானும்- அதனான் என்பது
அதிகாரத்தான் பெறப்படுதலானும்- காரணம் இன்றி வந்தது எனப்படாது எனவும்,

‘குக்கில் புறத்த சிரல்வாய’ என்புழி ஆக்கம் விகாரத்தால் தொக்கு நின்றது
ஆதலின் ஆக்கம் இன்றி வந்தது எனப்படாது எனவும்,

மயிர் நல்ல- பயிர் நல்ல- என்புழி அந்நன்மை பொருட்குப் பின் தோன்றாது
உடன் தோன்றிற்றேல் இயற்கையாம்; அவ்வாறன்றி முன் தீயவாய்ப் பின் நல்ல ஆயின
வழி அத்தீமை காணாதான் மயிர் நல்ல- பயிர் நல்ல- எனினும் இழுக்கன்று ஆதலான்
ஆக்கமும் காரணமும் இன்றி வந்தது எனப்படாது எனவும் மறுக்க.

இவ்வாறு செயற்கைப் பொருள் மேல் சொல் நிகழ்த்து மரபு என்பது ஆசிரியர்
தொல்காப்பியனாருக்கும் கருத்தாதல் எடுத்தோத்தானும் சேனாவரையரை உள்ளிட்ட
உரையாசிரியர் உரையானும் உணர்க. அவ்வாறு உணராதார்
 

  ‘காரணம் முதலா ஆக்கம் பெற்றும்
காரணம் இன்றி ஆக்கம் பெற்றும்
ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும்
இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள்’
நன்.409

எனத் தாம் வேண்டியவாறே கூறுப.