தோள் எளிய ஆயின, நல்லவை தீயவாம், தீயவை நல்லவாம், காகம் குருதி படிந்தால் குக்கிற் புறத்த சிரல் மயிர் நல்ல, பயிர் நல்ல என்ற தொடர்களில் முதல் மூன்றற்கும் காரணமும், பின் மூன்றனுள் முதலாவதற்கு ஆக்கமும், பின் இரண்டற்கும் ஆக்கமும் கரணமும் வாராமைக் காரணம் கூறப்பட்டுள்ளன. தோள் எளியவாதற்குக் காரணம் கற்புக் காலம்; நல்லவை தீயவாதற்கும் தீயவை நல்லவாதற்கும் காரணம் ஊழ்; காகம் குக்கில் புறத்த ஆயின சிரல்வாய ஆயின என்ற ஆக்கம் செய்யுட்கண் தொக்கு நின்றது. மயிரும் பயிரும் இயற்கையாகவே நல்லனவாயிருந்தால் ஆக்கம் வேண்டா. முதலில் தீயவாய்ப் பின் நல்ல ஆயினும், தீயநிலை அறியாதான் நல்லவாதலைக் கண்டபோது ஆக்கம் கொடாதது தவறாகாது. இவ்வுரைச் செய்திகள் சேனாவரையர் கருத்தை ஒட்டியனவே. ‘காரணம் முதலா ஆக்கம் பெற்றும்’ என்பது நன்னூல். |