சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-21575

தலை என்பதற்கு நாகம் என்பதும் முடிக்குஞ் சொல் அன்மை அறிக.

பன்னிரு கையும் என்புழி, பன்னிரண்டு என்பதே தொகுதிப் பெயர். கை
பன்னிரண்டும் என்றே வருதல் வேண்டும். ஆயின், பன்னிருகை என்பது ஒட்டி நின்ற
ஒரு சொல்லாய்க் கை என்பதன் வினையாகிய இயற்றி என்பதனைக் கொண்டு முடியும்
நிலை உண்மையின், பன்னிருகை என்பது உம்மையுற்றது.

வினைப்படு தொகுதி என்பது முடிக்குஞ் சொல்லே அது பெயராகவும் இருக்கலாம்,
வினையாகவும் இருக்கலாம் ஆதலின் உம்மைபெற்ற சொல் பெயர் கொண்டும் முடியலாம்
என்பதற்குக் கண் இரண்டும் குருடு முதலியன எடுத்துக்காட்டுக்களாம்.
 

  ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு
வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி
இருதோள் தோழர் பற்ற’ என்புழியும்,

‘கண்கவியாச் சென்றமார்ப்பக் கைந்நாஞ்சில் மேலசைஇ
ஒண்குழை ஒன்றொல்கி எருத்தலைப்ப-ஒண் சுடர்பூண்
நேர்மலர்த் தார்ஐவர் நீர்மை உடைத்ததே
நீர்மலிப்பூண் வெள்ளை நிலை’
நே.சொல்.12 மேற்.

என்புழியும் தோளும், குழையும் என்று வரவேண்டிய உம்மைகள் செய்யுள் விகாரத்தால்
தொக்கன. உரை தொல்.சொல்.33,34 ஆம் நூற்பாக்களின் சேனாவரையர் உரையேயாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.’

‘மன்னாப் பொருளும் அன்ன இயற்றே.’

தொல்.சொல்.33

34