சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-26589

பலபொருள் ஒரு சொல்
 

320. வினைபெயர் இனம்சார்பு மேவி விளங்காப்
பலபொருள் ஒருசொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே.

 

இது பலபொருள் ஒரு சொற்கண் ஆவது ஒரு மரபு வழுக்காக்கின்றது, குறித்த
பொருள் விளங்காமை கூறல் மரபு அன்மையின் விளங்கக் கூறுக என்றலான்.

இ-ள்: வினை முதலியபற்றி அவற்றான் வேறுபடாத பலபொருள் ஒருசொல்லை
இன்னது இது எனச் சிறப்பான் எடுத்துக் கூறுவர் புலவர் என்றவாறு.

எனவே, வினைமுதலியவற்றான் வேறுபடும் பலபொருள் ஒருசொல்லை அவற்றான்
வேறுபடக் கூறுவர் என்பதூஉம் ஆயிற்று.

வரலாறு: மா என்பது ஒருசார் விலங்கிற்கும் ஒரு மரத்திற்கும் வண்டிற்கும் பொது.
குருகு என்பது ஒரு பறவைக்கும் உலைமூக்கிற்கும் வளைக்குப்பொது.
 

  மாப்பூத்தது எனவும்,
இம்மா வயிரம் வெளிறு எனவும்-
மாவும் மரூதும் ஓங்கின எனவும்,
கவசம்புக்கு நின்று ‘மாக்கொணா’ எனவும்-

 
முறையே ஒருபொருட்கே சிறந்த வினையானும் பெயரானும் இனத்தானும் மரம்
என்பதூஉம், சார்பால் குதிரை என்பதூஉம் விளங்கின. ஏனையவும் அன்ன.

இனி அவற்றான் வேறுபடாதன மாமரம் வீழ்ந்தது- விலங்குமா வீழ்ந்தது-
எனவரும்.

ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனம். அங்ஙனம் அன்றி ஒருவாற்றான் இயைபு
உடையது சார்பு.