சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

598 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எனவே, இயைபுஇன்மை நீக்கிய விசேடமும், பிறிதின் இயைபு நீக்கிய விசேடமும்
ஆகிய இருவகை விசேடங்களுள், செங்குவளை முதலியவை கருங்குவளை
முதலியவற்றோடு இயைபு நீக்குதலின் பிறிதின் இயைபு நீக்கிய விசேடமாம். அது
பண்புத்தொகை உரைப்புழிப் பெறப்படுதலின் இஃது இயைபு இன்மை நீக்கிய விசேடம்
கூறிப் போந்தவாறும் ஆயிற்று என்பதூஉம் பெற்றாம். என்னை? கமுகத் தோட்டம்
என்புழிப் பிற புல்மரம் முதலியவற்றொடு இயைபு நீக்காது கமுகோடு இயைபுஇன்மை
மாத்திரை நீக்கிக் கமுகினை உடைத்து இத்தோட்டம் என்பது பட நிற்றலின், பிறவும்
அன்ன.

வடநூலார் இயைபு இன்மை நீக்குதலை அயோக விவச்சேதம் என்றும், பிறிதின்
இயைபு நீக்குதலை அந்யோக விவச்சேதம் என்றும் கூறுப. 29
 

விளக்கம்
 

ஒருபெயர்ப் பொதுச்சொல்லைத் தலைமையும் பன்மையும் ஆராய்ந்து அவற்றுள்
ஒன்று பற்றிப் பெயரிடுக. பல பொருட்கும் பொதுவாகிய சொல்லினை அவற்றுள்
ஒன்றனால் பெயரிடுதல் வழு ஆயினும், தலைமையும் பன்மையும் ஆகிய ஒன்று பற்றிப்
பெயரிடும் மரபு பற்றி அமைக என மரபு வழு அமைத்தவாறு.

பார்ப்பனச் சேரியில் வாழும் பார்ப்பார் சிலராயின் அப்பெயரைத் தலைமை பற்றிய
வழக்காகக் கொள்க; பார்ப்பார் பலராயின் பன்மை பற்றிய வழக்காகக் கொள்க. பிறவும்
அன்ன.

எயினர்நாடு என்பது ஆண்டு வாழ்வாருள் எயினர் பலராதலான் வந்தபெயர்.

ஒருபெயர்ப் பொதுச்சொல் என்பது தன்கண் பலவகைப் பொருள்களையும்
உள்ளடக்கித் தொகுதி பற்றி வந்த பெயர் என்பதாம்; பலவேறு பொருள்களில் வரும் மா,
குருகு முதலியன போல்வது அன்று இது என்பது.