சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-29599

சேரி என்பது பலகுடி சேர்ந்தது என்பது நச்சினார்க்கினியர் உரை. தெரு,
பெருவிறல், கடகம், குற்றி, அதர், இல் என்பன பொதுவான பெயர்ச் சொற்களே, இவை
தொகுப்புப் பெயர் அல்ல. அதனால் இவற்றிற்கும் தலைமை பற்றியோ பன்மை பற்றியோ
அடை கொடுத்தல் சாலும் என்பது ஒன்றென முடித்தலால் கொள்ளப்பட்டது.

அரசர் பெருந்தெரு என்பது அரசர் உலாவுதற்கு என்றே அமைந்த வீதி.
அதன்கண் பிறரும் செல்லுதல் கூடும்.
 

  ‘வளவநின் புதல்வன் ஆங்கோர்
மணிநெடுந் தேர்மேல் ஏறி
அளவில் தேர்த் தானை சூழ
அரசுலாந் தெருவில் போங்கால்
திருநகர்.30

என்பது திருத்தொண்டர் புராணம்.

இனி, கடகத்துள் வயிரமேயன்றிப் பிறவும் உண்மையான், வயிர கடகம் என்பது
தலைமை பற்றிய வழக்கு.

பெருவிறலுக்கு வெண்குடையே யன்றி வீதிஉலா வருங்கால் கவிக்கப்படும்
பொற்குடை முதலியனவும் உண்மையான், வெண்குடைப் பெருவிறல் என்பது தலைமை
பற்றிய வழக்கு.

மாடு மேயும் இடத்தில் ஆடு முதலியனவும் மேய்தலானும், மாடு உராய்ந்துகொள்ள
நட்ட தறியில் ஏனைய விலங்குகளும் தினவு தீர உராய்ந்து கொள்வது கூடும்
ஆதலானும், காளைகளுக்கு அமைந்த இடத்தில் பசுக்களும் கட்டப்படலாம் ஆதலானும்,
ஆனதர்- ஆதீண்டு குற்றி-எருத்தும்- என்பனவும் தலைமை பற்றி வந்தன.