சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-30601

வரலாறு:
                    ‘தொடியோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்'

நற்.54

என்பது உயர்திணைக்கண் பெயரின் பிரிந்த ஆண் ஒழி மிகுசொல்.

வடுகர் அரசர் ஆயிரம் மக்கள் உடையர் என்பது பெயரின் பிரிந்த பெண்ஒழி
மிகுசொல்.

இவர் இல்வாழ்க்கைப்பட்டார் என்பது தொழிலின் பிரிந்த ஆண் ஒழி மிகுசொல்.

இவர் கட்டில் ஏறினார் என்பது தொழிலின் பிரிந்த பெண் ஒழிமிகுசொல்.

நம்பி நூறு எருமை உடையன் என்பது அஃறிணைக்கண் பெயரின் பிரிந்த
ஆண்ஒழி மிகுசொல்.

நம் அரசன் ஆயிரம் யானை உடையன் என்பது பெயரின் பிரிந்த பெண் ஒழி
மிகுசொல்.

தொடி செறித்தலும் மக்கள்தன்மையும் இல்வாழ்க்கைப்படுதலும் கட்டில் ஏறுதலும்
எருமைத்தன்மையும் யானைத் தன்மையும் ஒழிக்கப்படும்    பொருட்கும் உண்மையான்
பொதுவாய் நிற்கற்பாலன ஒன்பாற்கு உரியவாய் நிற்றலின் மரபு வழு அமைத்தவாறு
ஆயிற்று என்பது.

பிற சொல்லால் பிரிவன ‘வினைபெயர் இனம் சார்பு’ என்பது முதலியவற்றான்
ஓதப்படுதலானும், ஆண்டு வழு இன்மையானும் ஈண்டுத் தாமே பிரிவன கொள்க.

தம்மால் தாம் பிரியும் என்பார் ‘பெயரினும் தொழிலினும்’ என்றார்.
பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் தாமே பிரிவன எனினும் அமையும்.