எதிர்மறையே தனக்கு மறையாய் வருதலும் கொள்க. இவ்விரண்டு எச்சத்திற்கும் செய்யாமை என்பதூஉம் மறை. இனி, உண்ணாமைக்கு என்பது உண்ணிய- உண்ணியர் உணற்கு- என்பனவற்றிற்கும், உண்ண என எதிர்காலம் உணர்த்தும் செய என் எச்சத்திற்கும் மறையாம். இனிச் செயின் என்பதற்கு ‘மழை பெய்யாவிடின் அறம் பெறாது, மழை பெய்யாவிடின் மரம் குழையாது, எனப் பிற சொல்லான் மறை வரும். இது, உண்ணாதபின்- உண்ணாதமுன்- உண்ணாக்கால்- உண்ணாக்கடை- உண்ணாவழி- உண்ணாவிடத்து- எனவும் வரும். இனி, கொள்ளாது ஒழிவான் என ஏனையவற்றிற்கும் வரும். இனி, கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாத சாத்தன் எனவும் வரும் பெயரெச்சக் குறிப்பு மறைவிகற்பமும் அறிக. இனி, சோறு உண்டாயிருந்தது- சோறு ஆவதாயிருந்தது- என்பனவற்றிற்குச் சோறு இன்றி- சோறு அன்றி-என வினையெச்சக்குறிப்பு மறை ஆதலும் கொள்க. வேற்றுமை எதிர்மறுத்து வரும் எனவே, அவ்வேற்றுமை ஏற்றசொல் முற்றுச்சொல்லேயாம் ஆதலின், வினை முற்றுச்சொற்கும் மறை வரும் என்பது கூறினார் ஆயிற்று. இனி செய்யும் என் முற்றிற்கும் உண்ணான் அவன்- உண்ணாதுஅது- என வரும் மறை ஒன்றென முடித்தலால் கொள்க.’- என்பது நச்சினார்க்கினியர் உரை. (தொல்.சொல்.238) |