சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-36625

வழுக்காத்தல்- 330-332
எச்சப்பெயர்வினை முதற்கண்ணும் வருமாறு
 

330 இறுதி வயின்வரூஉம் எச்சப் பெயர்வினை
முதல்வயின் வருவன வருதலும் முறையே,
 

 

இது வழுவற்க எனக்காத்தலும், வழுவி அமைக்க என அமைத்தலும் ஆகிய
முறைமை பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது; என்னை? ஒன்றனது அவாய்நிலையை
முடித்தற்கு வரும் சொல் பின் வருதல் மரபு ஆகலின் வழுவற்க எனவும், முன்வருதல்
மரபு அன்மையின் வழு ஆயினும் முடித்தற்கு உரியன வரின் அமைவுடைய எனவும்
கூறுதலின்.

இ-ள்: உருபு ஏற்ற சொற்கும் முற்றுச்சொற்கும் பெயரெச்சச்சொற்கும் எச்சமாய்
அவற்றின் அவாய்நிலையை முடித்தற்கு வரும் பெயரும் வினையும் இறுதிக்கண் வரும்;
அவற்றது அவாய்நிலையை முடித்தற்கு உரியன முதற்கண் வருதலும் வழுவாகாது
இலக்கணமாம் என்றவாறு.

எ-டு: சாத்தன் வந்தான்- நிலத்தைக் கடந்தான்- சாத்தனொடு வந்தான்- சாத்தற்குக்
கொடுத்தான்- சாத்தனின் வலியன்- சாத்தனது ஆடை- குன்றத்துக்கண் இருந்தான்-
சாத்தா! வா- எனவும்,
 

  வந்தான் வழுதி- கரியன்மால்- எனவும்,
உண்ட சாத்தன் எனவும்,
உண்டு வந்தான் எனவும்,
 

 
வந்தான் சாத்தன்- கடந்தான் நிலத்தை- வந்தான் சாத்தனொடு- கொடுத்தான் சாத்தற்கு-
வலியன் சாத்தனின்- இருந்தான் குன்றத்துக்கண்- வா சாத்தா- எனவும்,