சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

628 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொல்காப்பியனார் வினைமுற்று- பெயரெச்சம்- வினையெச்சம்- என்பன முடிக்குஞ்
சொல்லொடு புணரும் நிலைக்கண், முடிக்குஞ் சொல் முதற்கண் வருதல் பற்றி யாதும்
கூறவில்லை. பின்னுள்ளோர் கூற்றைத் தழுவி இவ்வாசிரியர் அவற்றையும் கொண்டார்
என்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.’
 
தொல்.சொல்.103
 
  ‘எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும்.’
‘வேற்றுமை ஈற்றினும் நிற்பினும் வரையார்.’
 
நன்.357
மு.வீ.பெ.82
 

(ஆடைசாத்தனது, கூகை குன்றத்துக்கண் என முடிக்குஞ் சொல் இறுதி வரினும்
முத்துவீரியமுடையாருக்கு வழா நிலையேயாம்.)
 

உருபின் கண்ணதொரு வழுவமைதி
 

331
 
ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய்உருபு தொகாஅ இறுதி யான,
 

 

இஃது உருபின் கண்ணது ஆகிய வழுவமைதி பற்றி நிகழ்வதோர் ஒழிபு
கூறுகின்றது; என்னை? தாம் நின்று தம் பொருள் உணர்த்தற்பாலன தொக்கு நிற்றல்
இலக்கணம் அன்மையின் வழுவாயினும், தம்பொருள் உணர்த்தும் ஆற்றல் உடையன
அமைவுடைய என்றலின்.

இ-ள்: ஐகாரவேற்றுமைப் பொருளும் கண்ணென் வேற்றுமைப் பொருளும் அல்லாத
பிற பொருள்மேல் நின்ற உருபு தொடர்மொழி இறுதிக்கண் தொக்கு நில்லா என்றவாறு.