உலோகம் நிருத்தம்- கீதம்- வாச்சியம்- வச்சிரம்- அருத்தம் கருமம்- கருப்பம்- காப்பியம்- பருப்பதம் என்றாற்போல்வன அவரொடு ஒருதன்மையர் செய்யுட்கண் இயைந்து வந்தன. இவைஎல்லாம் பொதுவும் சிறப்பும் ஆம் ஈரெழுத்தானும் சிறப்பெழுத்தானும் இயற்றப்பட்டு, ஆரியச்சிதைவாய்த் திரிந்து ஏற்கும் எழுத்துக்களான் மருவிவந்தன. பிறவும் அன்ன.ஒன்றெனமுடித்தலான் நட்டம்- கண்ணன் என்றாற் போலும் பாகதச்சிதைவாய் மருவி வந்தனவும் கொள்க. இவ்வாரியச்சொல் ஒரு நிலத்திற்கே உரித்து அன்றி பதினெண் நிலத்திற்கும் விண்ணிற்கும் புவனாதிக்கும் பொதுவாய் வருதலின் திசைச்சொல்லுள் அடங்காமையான் வேறு கூறினார். அற்றேல், வடசொல் என்றது என்னை எனின், ஆண்டு வழக்குப் பயிற்சி நோக்கி என்க. இவ்வெழுத்து இவ்வெழுத்தாய்த் திரிந்து வரும் என வரையறுத்து ஓதப்புகின், அவ்வரையறையிற் பிறழ்ந்தும் வருதலின், அங்ஙனம் ஓதாது ‘இயைவன வடசொல்’ என்றார். |
பொது எழுத்துக்கள் இருபத்தைந்தும், ஆரியச்சிறப்பெழுத்துக்கள் இருபத்தெட்டும் விளக்கி உரைக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் நச்சினார்க்கினியத்தைத் தழுவியனவே. நட்டம் என்பது ஆரிய மொழியில் நிருத்தம் எனவும், கண்ணன் என்பது கிருஷ்ணன் எனவும் உள்ள சொற்கள். |