யான் பாணன்- யான் தன்மை; பாணன் படர்க்கை; யான் கடுவன் என்பதும் அது. நீ நம்பி- நீ முன்னிலை; நம்பி- படர்க்கை; நீ சேவல் என்பதும் அது. இங்ஙனம் இடவழுவாகிய சொற்களை எடுத்துக்காட்டுதல் பொருந்தாது என்று இவ்வாசிரியர் மயிலைநாதரை (நன்.358) மறுக்கின்றார். இவை நேரிய சொற்றொடர்கள் ஆதல் வேண்டுமாயின், யான் பாணன் ஆவேன்- யான் கடுவள் ஆவேன்- நீ நம்பி ஆவை- நீ சேவல் ஆவை- என்ற தன்மை முன்னிலை வினைகளை முறையே முடிக்கும் சொற்களாகப் பெறுதல் வேண்டும். அப்பொழுது யான் ஆவேன், நீ ஆவை, என யான் நீ என்பன முடிக்குஞ் சொல்லொடு பொருந்தும். பாணன், கடுவன், நம்பி சேவல் என்பன முடிக்குஞ்சொல்லின் பகுதி கொண்டு முடியும், யான் நீ அல்லேன் என்பது போல எனக்கொள்க. அல்லதூஉம் ‘நாய் தேவன் ஆயிற்று’ என்புழிப் போல, முடிக்குஞ் சொற்கு அடையாயின எனலும் ஒன்று. ‘அவனயான், சாத்தன்யான் என்றல் தொடக்கத்துப் பெயரொடு பெயர்மயங்கின இடவழுவும் கண்டு கொள்க’ (நன்.374) என்றார் மயிலைநாதர். |