அவை விரியெனப்படா என்க. வடநூலாரும் பிரியாத்தொகையும் பிற சொல்லான் விரிக்கப்படும் எனப் பிறசொல் கொணர்ந்து விரிப்ப. விரிக்குங்கால் கரியகுதிரை கரிதாகிய குதிரை கரியதாகிய குதிரை என அத்தொகையை பொருள் உணர்த்துவன எல்லாவற்றானும் விரிக்கப்படும்,‘என்னகிளவியும்’ என்றதனான், சாரைப்பாம்பு- வேழக்கரும்பு- கேழற்பன்றி- எனப் பண்பு தொகாது பெயர் தொக்கனவும் தொகையாதல் கொள்க. இவற்றது சாரை முதலிய நிலைமொழி பிரித்த வழியும் பொருள் உணர்த்தலின் இவற்றைப் பிரித்துப் புணர்த்தார். அஃதேல், பாம்பைச்சாரை விசேடித்தல் அல்லது சாரையைப் பாம்பு விசேடித்தது இன்று ஆகலின், ஒன்றை ஒன்று பொதுமை நீக்காமையான் சாரைப்பாம்பு முதலாயின பண்புத்தொகை ஆயினவாறு என்னை எனின், நன்று சொன்னாய்; விசேடிப்பதூஉம் விசேடிக்கப்படுவதூஉம் ஆகிய இரண்டனுள், விசேடிப்பது விசேடியாக்கால் அது குற்றமாம். விசேடிக்கப்படுவது விசேடித்தது இன்றேனும், விசேடிக்கப்படுதலாகிய தன்மைக்கு இழுக்கு இன்மையான் விசேடியாது நிற்பினும் அமையும் என்க. இவ்வேறுபாடு பெறுதற்கு அன்றே ‘இன்னது இது என வரூஉம்’ எனப் பின்மொழியை விசேடிப்பதாகவும் முன்மொழியை விசேடிக்கப்படுவதாகவும் ஓதினார் என்க. அற்றேனும் சாரை எனவே குறித்தபொருள் விளக்கலின் பாம்பு என்பது மிகையாம் பிற எனின், அற்றன்று; உலக வழக்காவது சூத்திர யாப்புப்போல மிகைச்சொற் படாமை சொல்லப்படுவது ஒன்று அன்றித் தொன்றுதொட்டுக் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவது ஆகலின் அது கடாஅன்று என்க. உயர் சொற்கிளவி’ (தொல்.சொல்.27) ‘இடைச்சொற் கிளவி’ (தொல். சொல்.159) ‘உரிச்சொற் கிளவி’ (தொல்.சொல்.159) என்பன போல்வனவும் அவ்வாற்றான் அமைவுடைய |