இஃது ஓசை வேறுபாட்டான் ஒருசொல் ஒருசொல்லாம் என்பதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: ஒரு தொழிலினை மேற் செய்யாய் என்னும் மறையாகிய முன்னிலை வினைச்சொல் அத்தொழிலினைச் செய் என்னும் உடன்பாட்டு வினைச்சொல்லாம் இடத்தினை உடைத்து என்றவாறு. ‘இடன் உடைத்து’ என்றதனான், பெரும்பான்மையும் மறையாய் வரும் உண்ணாய்- ஓதாய்- என்பன போல்வன, வேண்டிக்கோடல் பொருண்மைக்கண் படுத்தல் ஓசையால் சிறுபான்மை உடன்பாட்டின்கண்ணும் வரும் என்பதாயிற்று.
வரலாறு: ‘அறியாய் வாழி தோழி பொறிவரிப் பூநுதல் யானை (அகம்.268)
என்னும் அகப்பாட்டினுள் அறியாய் என்றது. ‘காமம் கலந்த காதலர் உண்டெனின் நன்று மன்இது நாடாய் கூறி.’ என்றதனோடு இயையுங்கால், ‘அவனொடு கூட்டம் உண்டு எனின் அது மிகவும் நன்று; அதனை ஆராயாமல்’ கூறுகின்றாய்; அதனை நின்மனத்தான் ஆராய்ந்து பாராய், என வேண்டிக்கோடல் பொருண்மைக்கண் படுத்தல் ஓசையான் முன்னிலை ஏவல் உடன்பாட்டின்கண் வந்தவாறு காண்க. இனி வழக்கின்கண்ணும், இந்நாள் எம்மில் வந்து உண்ணாய்- இப்பொழுது சொல்லாய்- என வரும். பிறவும் அன்ன. உண்- தின்- என்பன முதலிய முன்னிலை ஏவல் உயர்ந்தான் இழிந்தானை ஏவுதற்கண் வருவன. இவை அன்ன அல்லவாம் என்க. நீ கலாய்த்திராது உண்ணாய் என்ற பொருளை உண் என்பது தாராது, ஏவுதற் பொருட்டாய் நின்றமையின். |