சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-62709

ஒருபொருட் பன்மொழி
 

356 ஒருபொருள் பன்மொழி சிறப்பினின் வழாஅ.
 

 

இதுவும் அது.

இ-ள்: பொருள் வேறுபாடின்றி ஒரு பொருளைக்குறித்து வரும் பலசொற்கள்
அப்பொருளைச் சிறப்பித்தலின் வழுவன்று கடியப்படா; மரபு என்று கொள்ளப்படும்
என்றவாறு

 வரலாறு:

                    ‘நிவந்தோங்கு பெருமலை’
எனவும்,
                    ‘துறுகல் மீமிசை உறுகல்’
எனவும் வரும். பிறவும் அன்ன.

62


விளக்கம்

நிவந்து ஓங்கு என்ற இரண்டும் ஒருபொருளன;
                    மீ மிசை என்ற இரண்டும் ஒரு பொருளன.

“ஒருபொருளைக் குறித்து வரும் பல சொற்கள் அவ்வாறு வருதற்கு ஒரு காரணம்
இன்றேனும் செவிக்குச் சொல்லின் தோன்றச் சிறந்து நிற்றலின், அவை வழு என்று
நீக்கப்படா.

“ ‘சிறப்பினின்’ என்பதற்குச் சிறப்பித்தலின் என்ற பொருள் இன்று. இக்
காரணத்தான் வந்தனவேல் அவை ஒரு பொருட் பலபெயருள் அடங்கும். மீமிசை
என்றால் மேல் என்பதே பொருளன்றி, விசேடித்த தொருசிறப்பு இன்று. உண்டேல்
அஃது இஃது எனவிதந்து கூறுவார் ஆதலின் அவ்வுரை பொருந்தாது.”- நன்.398
விருத்தி.

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஒருபொருள் பன்மொழி சிறப்பி னின்வழா.’ நன்.398