இவ்வதிகாரத்துள் சொல் இலக்கணம் உணர்த்துவான் புகுந்து, ஒருவகையான் சொல்லாவது இவ்வியல்பிற்று என்பது தோன்ற அதன் பகுதியும் அஃது உணர்த்தும் பொருளும் அப் பொருட்கூறும் அவற்றை உணர்த்தும் இடமும் உணர்த்தும் பகுதியும் உரைத்துப் பின்னும் அச்சொல்லையே பெயர் முதலாக வகுத்துக் கூறிப் பின்னர் விரித்துக் கூறுவான் தொடங்கினவற்றுள் இது பெயரது பொதுவிதியும் அதன் பகுதியும் கூறுகின்றது. இ-ள்: பெயர் என்று கூறப்படுவன இத்தன்மைய என்று அவற்றின் இயல்பு ஆராயும் இடத்துப்பிறிதொருநிமித்தம் இன்றி வழங்குதல் பயத்தவாய் இதற்கு இது குறி என்று இட்டு வழங்கி வருதலையும் இவ்வியல்பிற்று இது என்று ஒரு நிமித்தம் பற்றி வருதலையும் மரபு பற்றி வருதலையும் ஒன்றன் பெயரை அதற்கு இயைபுஉடைய பிறிது ஒன்றற்கு ஆக்கும் ஆக்கம்பற்றி வருதலையும் பற்றி, வினையான் வருவனவே காலத்தை விளக்க ஒழிந்தன. காலத்தை விளக்காதனவாய் எட்டு வேற்றுமையும் சார்தற்கு இடனாய், இருதிணை ஐம்பால் மூவிடங்களின் ஒன்றற்கு உரியவும் பலவற்றிற்கு உரியவும் ஆகிப் பகுதிப்படப் பொருளை விளக்குவன ஆகிய சொற்களாம் என்று சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு. |