இ-ள் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகிய முடிக்கப்படும் சொற்களையும் அவற்றை முடிக்கும் சொற்களையும் வேறுவேறு நிரல்பட நிறுத்தி முறையேஆதல் எதிரே ஆதல் முடிக்கப்படும் சொற்களையும் முடிக்கும் சொற்களையும் இயலுமாறு கூட்டிப் பொருள் கோடல் நிரல்நிறைப் பொருள்கோளாம் என்றவாறு. தொடர்மொழிப் பொருள் முடிக்கும் சொற்கண்ணது ஆதலான் அதனைப் ‘பொருள்’ என்றார். பெயரும் வினையும் என்றதனான், பெயர்ச்சொல்லான் வருவதூஉம் வினைச்சொல்லான் வருவதூஉம் அவ்விருசொல்லானும் வருவதூஉம் என மூன்றாய், ‘முறையினும் எதிரினும்’ என்றதனான் நிரல்பட நிற்கும் முறைநிரல்நிறையும் நிரல்பட நில்லாது மயங்கி நிற்கும் எதிர்நிரல்நிறையும் என அவை ஒரோ ஒன்று இரண்டு இரண்டாம் எனக்கொள்க.
வரலாறு: ‘கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினனே வஞ்சி மகள்’
என்புழி, முடிவனவும் முடிப்பனவும் ஆகிய பெயர்ச்சொற்கள் நிரல்பட வேறு வேறு நிற்றலின் பெயர் முறைநிரல் நிறை. ‘மாசு போகவும் காய்பசி நீங்கவும் கடிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு’ என்புழி, முடிவனவும் முடிப்பனவும் ஆகிய வினைச்சொற்கள் நிரல்பட வேறு வேறு நிற்றலின் வினைமுறைநிரல்நிறை. ‘உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடல்இருள் ஆம்பல் பாம்புஎன்ற- கெடலருஞ்சீர்த் திங்கள் திருமுகமாச் செத்து’ |