சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

728 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்


 

‘இடைமொழி முதலினும் ஈற்றினும் எய்தித்
தருவது பொருளைத் தாப்பிசை ஆகும்.’
 


மு.வீ.செய்யுளணி.28
 

அளைமறி பாப்புப் பொருள்கோள்
 

367 செய்யுள் இறுதி மொழிஇடை முதலினும்
எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே.


 

இது நிறுத்தமுறையானே அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: செய்யுள் ஈற்றினில் நின்ற சொல் இடையினும் முதலினும் சென்று இயைந்த
பொருள்கோள் அளைமறி பாப்புப் பொருள்கோளாம் என்றவாறு.

எ-டு:
                    ‘தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும்
                    சூழ்ந்த வினையாக்கை சுடஇழிந்து நாற்கதியில் சுழல்வார் தாமும்
                    மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும்
                    வாழ்ந்த பொழுதினே வான்எய்தும் நெறிமுன்னி முயலா தாரே’
எனவரும். 73
 

விளக்கம்
 

வளைக்கண் தலை முதலாக உட்சென்ற பாம்பு பின் திரும்பித் தலை வெளியிலும்
வால் உள்ளுமாக மடங்கித்தங்குதல் போல், செய்யுட்கண் முதலில் சொல்லிய அடிமுதல்
இறுதியில் சொல்லிய அடிகாறும் உள்ளனவற்றை இறுதியை முதலாகக் கொண்டு
வரிசையாகப் பொருள் செய்யுமாறு அமையும் பொருள்கோள் அளைமறிபாப்புப்
பொருள்கோளாம்.