சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

740 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

நூல்பற்றிய வழுவமைதி
 

371 பழையன கடிதலும் புதியன புணர்த்தலும்
வழுவல கால வகையி னானே.
 

 

இது நூல்பற்றி நிகழ்வதொரு வழுவமைதி கூறுகின்றது.

இ-ள்: அக்காலத்து உண்மையான் தொல்லாசிரியர் நூலுள் விதிக்கப்பட்டனவற்றுள்
சில இக்காலத்து இன்மையான் அவற்றிற்கு யாம் இலக்கணம் கூறாது அவற்றை விடுதலும்,
அக்காலத்து இன்மையான் அந்நூலுள் விதிக்கப்படாதனவற்றுள் சில இக்காலத்து
உண்மையான் அவற்றிற்கு யாம் இலக்கணம் கூறுதலும் முன்னோர் நூலின் முடிபுநோக்கி
முறையானே குன்றக் கூறலும் மிகைபடக்கூறலும் ஆகிய குற்றம் ஆகா, காலக்
கூறுபாட்டான் என்றவாறு.
 

  எ-டு:
‘கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா’
 


தொல்.சொல்.426
என்னும் தொடக்கத்தன அக்காலத்து உண்மையின் அவற்றிற்குத் தொல்லாசிரியர்
இலக்கணம் கூறினார் ஆயினும், இக்காலத்து இன்மையான் விடுக்கப்பட்டன. சரி-
சமழ்ப்பு- சட்டி- சழக்கு- என்னும் தொடக்கத்தன அக்காலத்து இன்மையின் அவற்றிற்குத்
தொல்லாசிரியர் இலக்கணம் கூறார் ஆயினும், இக்காலத்து உண்மையான் இலக்கணம்
கூறப்பட்டன. பிறவும் இவ்வாறே காண்க. 77
 

விளக்கம்
 

கேட்டை, நின்றை, காத்தை, கண்டை, கண்டீர், கொண்டீர், சென்றது, போயிற்று
முதலியன முற்காலத்தில் கட்டுரைக்கண் அசையாய் வந்தன. (தொல்.சொல்.424, 425)