இது பலர்பாற்கு உரிய பெயர் ஆமாறு கூறுகின்றது. இ-ள்: மேல் கிளை முதலாகக் கூறப்பட்ட பொருட் தகுதிகளைப் பொருந்திவரும் ரகரஒற்றை ஈறாக உடைய சொற்களும், அவற்றுள் கள் என்னும் விகுதியை ஈறாக உடைய சொற்களின் ஈண்டைக்குப் பொருந்துவனவும், அவைபோல்வன பிறவும் பலர்பாற்கு உரிய பெயரின் திறனாம் என்றவாறு. வரலாறு: தமர்- நமர்- நுமர்- எமர்- ஒருவர்- இருவர்- முப்பத்துமூவர் என னகர ஈற்றை ரகர ஈறாக்கிக் காண்க. அடிகள்- முனிகள்- மனுக்கள்- கோக்கள்- வேள்கள்- விடலைகள்- வில்லிகள்- வாளிகள்- கணிகள்- மடந்தைகள்- பரத்தைகள்- உழத்திகள்- மறத்திகள் என்றாற் போல்வன கள் ஈற்றுள் ஈண்டைக்கு ஏற்பன. ‘பிற’ என்றதனானே, மாந்தர்- மக்கள்- மகார்- சிறார்- எல்லாரும்- தந்தையார்- தாயார்- பெருங்காலர்- பெருந்தோளர்- பட்டிபுத்திரர்- கங்கமாத்திரர்- பண்டிர்- பெண்டுகள்- மடந்தையர்- வேளிர் என்றாற் போல்வன பிறவும் கொள்க. |